Powered By Blogger

Wednesday, May 26, 2010

மாவோயிஸ்டுகள் ?

ஆயுதப் புரட்சியின் மூலம்
மீட்சியை பெறுவதாய்
சொல்கிறார்கள் !
ரயில் கவிழ்ப்பை தவிர
வேறு புரட்சி செய்ததாய்
தெரியவில்லை ?

ஏழை பங்காளர்கள் என
மார் தட்டி நிற்கிறார்கள்
ஏழைகளை தவிர
வேறு யாரையும்
கொன்றதாய் தெரியவில்லை ?

மார்கஸையும், மாவோவையும்
போற்றி புகழ்கிறார்கள்
மார்க்சிஸ்ட்டுகளை கொல்வதை
தவிர வேறு
லட்சியம் கொண்டதாய் தெரியவில்லை ?

பழங்குடி மக்களுக்காய்
பாடுபடுவதாக சொல்கிறார்கள் !
பகடைகாய்களாய் அன்றி
அவர்களை பண்படுத்தியதாய்
தெரியவில்லை ?
முதலாளித்துவத்தை
அடியோடு அழிக்கும் அதிகாரம்
கொண்டதாய் சொல்பவர்கள் !
(காங்கிரஸ்) பெருமுதலாளிகளுக்கு
காவல் காப்பதில் காட்டும்
கன்னியத்தை வேறு
எங்கும் காட்டியதாய் தெரியவில்லை ?

மாவோயிஸ்டுகள் எனச் சொல்லி
மம்தாயிஸ்டுகளாக மாறிப்போனவர்களே !
மாற்றம் ஒன்றை தவிர
மாற வேறு ஒன்று இல்லை
மார்க்சிஸ்டுகள் சிந்திய ரத்தம்
ஒரு போதும் வீண் ஆனதில்லை

அப்பாவிகளை கொல்வதை
அடியோடு நிறுத்துங்கள் !
மக்கள் புரட்சி மகத்தானதே
அதை மக்களுக்காக செய்ய
முனையுங்கள் !
சாமானியர்களின் சமாதியில்
சமதர்ம பூங்கா அமைத்திட முடியாது !
அதை உண்மை பொதுவுடமை இயக்கங்கள்
ஒரு போதும் அனுமதிக்காது !

Friday, May 21, 2010

அவள்....?


என்னுடன் சிரிக்கிறாள் !
எனக்காய் அழுகிறாள் !
பசி என்ற நினைத்த மாத்திரத்தில்
எனக்கு படையிலிட்டு
பரிமாறுகிறாள் !
அவளோடு தொடங்கும்
என் பொழுது
அவளின்றி முடிய
மறுக்கிறது !
அவள் மனத் தெம்பு
குறையும் நேரத்தில்
என் வார்த்தைகளிலிருந்து
திராணியை சேகரிக்கிறாள் !
நான் சோர்ந்து விழும் போது
நம்பிக்கை வார்த்தைகளில்
எனைத் தாங்கி நிற்கிறாள்
அவள் விரல் நுணியில்
என் வலிக்கான
மருந்து
என் விழிச்சிரிப்பில்
அவள் விசும்பலின்
முடிவு
எனக்கும் அவளுக்குமானது
தாமரைக்கும் சூரியனுக்குமான
உறவு
அவளுக்காகவே
நான் உதிக்கிறேன் !
எனக்காகவே
அவள் மலர்கிறாள்
யார் இவள் எனக்கு ?
உறவுகள் சொல்லி
அவள் அன்பின்
ஆழத்தை குறைத்திட
மனமில்லை
ஏன் எனில்
அவள்
எனக்கு எல்லாமுமானவள் !

Wednesday, May 19, 2010

எம் ஈழ மக்கள்


தொப்புள் கொடி உறவா ?
இல்லை
தொன்று தொட்ட மரபா ?
எதுவென தெரியாது
ஆனாலும் அவர்கள்
எம்மவர்கள் !
நான் பேசும்
மொழியை
நன்றாய் பேசுபவர்கள்!
காப்பவன் யார் ?
அழிப்பவன் யார் ?
எதுவும் அறியாது
பதுங்கு குழிக்குள்
பாத்தியப்பட்டவர்கள் !
கிளஸ்டர் குண்டுகளுக்கு
கொத்து கொத்தாய்
மாண்டவர்கள் !
கந்தகத்தை சுவாசித்து சுவாசித்து
நுரையீரல் நோய்ப்பட்டவர்கள் !
அரசியல் அறியாததால்
அதிகாரத்தை விட்டவர்கள்
இன்று பலர் அரசியல் நடத்த
அஸ்திவாரம் ஆனவர்கள் !
தனி ஈழம் கிடைத்தால் என்ன ?
தனி நாடு கொடுத்தால் என்ன ?
மாண்டவர் மீள்வதில்லை !
சிரிக்கும் புத்தரின் சீடர்களே
இனியாவது வாழ விடுங்கள்
எம் மக்களை !
துயர் கொண்ட நெஞ்சங்கள்
இன்று துவண்டிருக்கலாம்
ஆனால்
என்றுமே தூங்கிவிடுவதில்லை!
பூந்தோட்டத்தில்
புரட்சி பிறப்பதில்லை
எகாதிபத்தியத்தின் பிடி
நீண்ட நாள் நிலைப்பதில்லை !
விடியலுக்கு இல்லை வெகுதூரம்
மௌனமாய் காத்திருப்போம் சில காலம்.....

Sunday, May 9, 2010

ராமனின் சீதைக்கு !

லங்கையில் கண்ணீரில் குளித்த நீ
உன் கணவனின் கண்மூடித்தனத்தால்
தீயில் குளித்தாய்....
கற்பு என்னும் கற்பனைக்கு
நீ தான் இலக்கணமாம் !
உன்னை காரணம் காட்டி
இங்கே ஓராயிரம் சீதைகளை எரித்துவிட்டார்கள்...
எங்கள் நவயுக ராமன்கள் !
தீயில் குளித்த நீ
எழுந்தது போல்
எங்கள் தாய்மார்கள் எழுவது இல்லையே !
தவறான உதாரணத்தை தரணிக்கு தந்துவிட்டாய்
மன்னித்து விடு
தாயே
உன்னை மன்னிக்க எனக்கு மனமில்லை !


Saturday, May 8, 2010

என்று நுழைவோம் ?




என் பாட்டன் காத்திருந்தான்
பன்னையார் அனுமதிக்கவில்லை...
என் தாத்தா காத்திருந்தார்
வெள்ளைக்காரன் அனுமதிக்கவில்லை...
என் தந்தை காத்திருந்தார்
அரசாங்கம் அனுமதிக்கவில்லை....
நானும் காத்திருக்கிறேன்
உன் வாசலில் நுழைய...
பரம்பரையாய் காத்திருந்தும்
பராசகத்தியே உன் கோவிலுக்குள்
நீ கூட எங்களை அனுமதிக்கவில்லையே ?

Wednesday, May 5, 2010

புடவை ?


புடவை !
தோள் சீலை போராட்டத்தின் குழந்தை !
பாரம்பரியத்தின் அடையாளம் புடவை
பிதற்றும் பைத்தியக்காரர்களே !
எது பாரம்பரியம் ?
சபையில் வைத்து உரியப்பட்டது திரௌபதியின் புடவை !
சுடிதார் அணிந்திருந்தால்
என்ன நடந்திருக்கும்
சிந்தித்த்து உண்டா என்னாலும் ?
பேருந்து பயணங்களில்
இடுப்பை கிள்ளும் இழிவு பிறவிகளின்
இச்சைக்கு பிச்சையிடவா
புடவை ?
குணிந்தால் அங்கங்கள் தெரியும் !
ஓடினால் கால்கள் இடறும் !
குணியாமலும், ஓடாமலும் செய்யும் வேலைகள்
தான் ஏதேனும் உண்டா ?
சிந்தீப்பீர் எம் பெண்டிரே !
ஆணுக்கு பெண் சரி நிகர்
சமானமாய் ஆவது எப்போது ?
உம் வளர்ச்சிக்கு தடையாய்
இருக்கும் புடவையை துறந்து
உமக்கேற்ற உடையில் நீர் புகும் போது !
உடுத்துபவருக்கு உகந்ததாய்
இருப்பதே உடை !
புடவை என்றுமே பெண்டிர் வளர்ச்சிக்கு தடை !